வியக்கு மழகில் விண்ணாய் மண்ணாய்
வியத்தகு நிலையில் நீராய் காற்றாய்
பயக்கும் பருவக் கால நிலையாய்
பயனாய் பயனின் பயன்படு பொருளானாய்!
சூழுல கெங்கும் சூழ்வெளி ஒளியாய்
ஆழ்அகல் அளவில் அளவிட இயலா
ஆழித் தாய்போல் அரிய உயிர்பல
அணைத்துக் காக்கும் அன்னை மாதா!
ஆலயங் கொண்டாய் அகில மெங்கும்
ஆல்நிழல் போல அடைக்கலம் தந்து
கால போக்கின் கழிவை நீக்கி
காத்தாய் கால கர்மத்தை நாளும்!
தேடுவர் தேவ மாதா உன்னை
தெண்ட னிட்டு பாவத்தை சொல்ல
கூடு மவரின் குறை களைகின்ற
குமரித் தாயே கூடிப் பணிந்தோம்